புதுச்சேரி, டிச. 27: பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பொதுப்பணி துறையில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கடந்த 2014ல் 250 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.290 என்ற கணக்கில் 16 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இவர்கள் தங்களை விதிமுறைப்படி நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஒரு நாள் சம்பளமான ரூ.290ஐ ரூ.200 ஆக குறைத்து சமீபத்தில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுப்பணித்துறை வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் நேற்று காலை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் சிறப்பு பணி அதிகாரி கார்த்திகேயனின் அலுவலகத்துக்கு சென்று அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பொதுப்பணித்துறை வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏன் இதுவரை எங்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கவில்லை என கேட்டும், நாள் சம்பளத்தை ஏன் குறைத்தீர்கள் என கேட்டும் அதிகாரியிடம் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.