பாகூர். டிச. 25: பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரையாம்புத்தூர், குருவிநத்தம், பாகூர் கிழக்கு, மதிகிருஷ்ணாபுரம், மணப்பட்டு, கிருமாம்பாக்கம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வரி வசூல் முகாம் கடந்த 23ம் தேதி தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கவுள்ள இம்முகாமில் 2019-2020ம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் உரிமம் வரி செலுத்தலாம். இதற்கான பணிகளில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 தினங்களில் நடந்த முகாமில் ரூ.3 லட்சத்து 700 வசூலாகியுள்ளது. இதில் மணப்பட்டு கிராம பஞ்சாயத்தில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் வர்த்தக உரிமம் பெறாமல் இயங்கும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வர்த்தக உரிமம் பெற்று கொள்ளலாம் என்றும், உரிமம் பெறாமல் தொழில் நடத்துவோர் மீது புதுச்சேரி கிராமம் மற்றும் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.