திருவண்ணாமலை, டிச.25: உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணி திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சுந்தரவள்ளி ஆய்வு செய்தார்.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நாளை மறுதினம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான பொருட்கள், வாக்கு பெட்டிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வாக்களார் பட்டியல், உள்ளிட்டவகைகள் தனி தனியாக பிரிக்கும் பணிகள் நேற்று நடந்தது. மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக வாக்குப்பெட்டிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.