நாகை, டிச.24: கீழ்வேளூர் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான 72 வகையான பொருட்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றம் 30ம் தேதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுபினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 9ம் தேதி முதல் வேட்புமனு பெறப்பட்டு 16ம் தேதி நிறைவு பெற்றது. 17ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும், 19ம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுதலும் நடைபெறு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி கீழ்வேளூர், நாகை, திருமருகல், கொள்ளிடம், செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய 6 ஒன்றியங்களிலும், 30ம் தேதி கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.