சென்னை, டிச.22:கோதாவரி ஆற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1,100 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை கிருஷ்ணா, பெண்ணயாறு, காவிரி வடிநிலங்களுக்கு திசை திருப்பி விடுவதன் மூலம் தமிழகத்தில் நீர் பற்றாக்குறையை போக்க முடியும் என்பதால், கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணையாறு-காவேரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. ₹60 ஆயிரம் கோடி செலவில் உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 247 டிஎம்சியை திருப்பி விட முடியும். இதில், தமிழகத்தில் 83 டிஎம்சி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தேசிய மேம்பாட்டு முகமை அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு தேசிய நீர் மேம்பாட்டு முகமை வரைவு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்த திட்டத்தில், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு திருப்பி விடப்படும் 247 டிஎம்சி நீரில் கர்நாடகா மாநிலத்துக்கு ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால், கர்நாடகா மாநிலம் சார்பில் இந்த திட்டத்தில் தங்களுக்கு நதி நீர் பங்கீட்டு தர வேண்டும் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடகா மாநிலம் அளித்துள்ள பதிலில், கோதாவரி நதி நீர் நடுவர் மன்றம், கிருஷ்ணா நதிநீர் நடுவர் மன்றம் தீர்ப்புகளின் படி கோதாவரியில் இருந்து கிருஷ்ணா, காவிரி , பெண்ணையாறு வடிநிலப்பகுதிகளில் கிடைக்கும் நீரில் கர்நாடகா மாநிலத்துக்கு பங்கு உள்ளது. அதே நேரத்தில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் கீழ் கர்நாடகாவுக்கு நீர் பங்கீடு அளிக்க வேண்டும். கர்நாடகா அரசிற்கு வழங்க வேண்டிய நீரை ஒதுக்கீடு செய்து விட்டு தான் இந்த திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த வேணடும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.