சேலம், டிச.18: சேலம் மாவட்ட விவசாயிகள் நடப்பாண்டில் ரபி பருவத்தில் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க வேளாண்மை துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து சேலம் வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் ரபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள், இழப்பு போன்றவை ஏற்படும் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து விவசாயத்தில் நிலைபெற செய்ய பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தினை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு தோல்வியுறுதல், மகசூல் இழப்பு மற்றும் வறட்சியினால் இடைக்கால துன்பம் ஏற்படுதல் ஆகிய இனங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட அலகு அடிப்படையில் விவசாயிகள் காப்பீடு பெற தகுதியுடைவர்கள். உள்ளூர் இடர்பாடுகள் மற்றும் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு ஆகிய இனங்களுக்கு தனிநபர் காப்பீடு பெற தகுதியுடையவர். உள்ளூர் இடர்பாடுகள் இனத்தில் பயிர் மூழ்குதல் ஆபத்து போன்றவை நெல் மற்றும் கரும்புக்கு பொருந்தாது.