திருச்சி, டிச. 18: திருச்சியில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர், கோழி வியாபாரி பலியாயினர்.தூத்துக்குடி கே.ஆர்.நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மகன் வேல்குமார்(20). திருச்சியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர்கள் கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் மகன் ஆல்வின், திருச்சி உய்யக்கொண்டான்திருமலையை சேர்ந்த பாலா மகன் ஆத்ரேயா ஆவர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டு பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் இண்டிகேட்டர் போடாமல் திரும்பியதில் கார் மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த வேல்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிந்து கார் டிரைவர் திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பிரபாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.