ஊட்டி, டிச.13: கேத்தி பாலாடா பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஊர்ப்புற நூலகத்திற்குள் மழைநீர் புகுந்து ஏராளமான புத்தங்கள் சேதமடைந்தன. ஊட்டி அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 15 ஆயிரம் நூல்கள் உள்ளன. மேலும், 90 மாத இதழ், 15 வார இதழ் மற்றும் நாளிதழ் வாசகர்களுக்காக வரவழைக்கப்படுகிறது. இதில் 1200க்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.கிளை நூலகமாக மாற்ற சொந்த கட்டிடம் இல்லாத நிலையில் கடந்த 23 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. போதிய இட வசதிகள் இல்லாததால் பல நூல்களை அடுக்கி வைக்க முடியாமல் பயனின்றி மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும் என பலரும் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் நீலகிரியில் பெய்த பருவமழை காரணமாக கேத்தி சுற்று வட்டார பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்த நூலகத்திற்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நீரில் நனைந்து சேதமாயின.