பந்தலூர், டிச.13: பந்தலூர் அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். பந்தலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்று பல தரப்பினரும் புகார் தெரிவித்துவந்தனர். இது குறித்து கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி பந்தலூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், விவேகானந்த சமூக சேவை சங்க நிர்வாகிகள் சுரேஷ் தீபக்ராம், செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையில், இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை, நோயாளிகள் நலசங்கம், மருத்துவமனை வளர்ச்சி குழு அமைக்க படவில்லை.
ரத்த பரிசோதகர் இல்லை, பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்காமல் கூடலூர், ஊட்டி அரசு மருத்துவமணைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். இதனால் நோயாளிகள் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.