செய்யாறில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் பீரோ உடைத்து 10 சவரன் நகை திருட்டு

செய்யாறு, டிச.13: செய்யாறில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் பீரோ உடைத்து 10 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செய்யாறு டவுன் வேல்சோமசுந்தரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30). இவர் தனது வீட்டின் அருகே புதிய காஞ்சிபுரம் சாலையில் பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டின் அருகே உள்ள பைக் ஷோரூமை திறக்க சென்றனர். பின்னர், மதியம் 12 மணியளவில் ராஜேஸ்வரி சமைக்க வீட்டிற்கு சென்றார்.

தொடர்ந்து, வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் பார்த்த போது அதில் இருந்த சுமார் 10 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம ஆசாமிகள் வீட்டின் பின் பக்கம் வழியாக சுவர் ஏறி குதித்து கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, வழக்குப்பதிந்து விசாரணை வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: