திருவண்ணாமலையில் பக்தர்கள் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை, டிச.13: திருவண்ணாமலையில் பக்தர்கள் நேற்றும் 2வது நாளாக பவுர்ணமி கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையால், கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத (கார்த்திகை) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் காலை 11.10 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் கிரிவலம் வர ஆரம்பித்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். அதேபோல திருவண்ணாமலையில் 2வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை வழிபட்டனர். வழக்கம்போல கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. ேமலும், எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலை 11.05 மணிக்கு பவுர்ணமி நிறைவடைந்தது.

Related Stories: