கோவை, டிச. 12: வீட்டு வசதி வாரியத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை (13ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கார்த்திக் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை, கடந்த 35 வருடங்களுக்கு முன்பு, பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. முறைகேடான கட்டுமானமே இதற்கு காரணம். தமிழக அரசும், வீட்டு வசதி வாரியமும்தான் இதற்கு முழு பொறுப்பு. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இனி எங்கு செல்வது? என தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் தவிப்பதை போல் உள்ளனர்.