திருப்பூர், டிச. 12: திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் விளைப்பொருட்களை மயில்கள் மற்றும் கிளிகள் கொத்தி சாப்பிடுவதால் தானிய விவசாயிகளுக்கு போதிய சாகுபடி இன்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் கோவில்வழி, நல்லூர், பொங்கலூர், காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம், குடிமங்கலம், மங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் தற்போது பெய்த மழையால் பல ஆண்டுகளாக வானம் பார்த்த பூமியாக இருந்த நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, ராகி, வெள்ளைச்சோளம் அதிகளவு பயிரிட்டுள்ளனர். அமராவதி பழைய, புது ஆயக்கட்டு பாசனம், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம், கீழ் பவானி பாசனம் ஆகியவற்றின் பயன்பெரும் விவசாயிகள் தொடர்ந்து மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் பயிரிடுகின்றனர். விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப பணத்தை செலவிட்டு நிலத்தை உழுது விதை தானியங்களை வாங்கி விளைநிலங்களில் விதைக்கின்றனர். மயில்கள், கிளிகள் பல்வேறு வகையான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து விதைகளையும், விளைந்த தானியங்களை கொத்தி சாப்பிடுகிறது. இதனால் விவசாயிகள் பறவைகளை விரட்ட துணி பொம்பைகள் வைத்தும், பல்வேறு கலரில் துணிகளை பறக்கவிட்டு பறவைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.