சிவகாசி, டிச. 11: சிவகாசி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவில்லை. நகரில் உள்ள பெரும்பாலான விடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கிருதுமால் ஓடை வழியாக சென்று மீனம்பட்டி கண்மாயில் கலக்கிறது. நகரின் முக்கிய கழிவுநீர் ஓடையான கிருதுமால் ஓடை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருதுமால் ஓடை அமைந்துள்ள முஸ்லீம் நடுத்தெரு, டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியில் தேங்கி கிடந்த கழிவுகளை நகராட்சி நிர்வாகத்தினர் தூர்வாரினர். ஆனால், ஓடை முழுவதும் தூர்வாரப்படவில்லை. இதனால், மீண்டும் கழிவுநீர் தேங்குகிறது. கிருதுமால் ஓடையை ஆக்கிரமித்து, பலர் வீடுகள், கடைகளை கட்டியுள்ளனர். முஸ்லீம் தெரு அருகே கிருதுமால் ஓடையே தெரியாத அளவுக்கு முட்செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், கந்தபுரம் தெரு, முஸ்லீம் நடுத்தெரு, சீதக்காதி தெரு, அண்ணா காலனி, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது.