தேனி, டிச.11: நெல்பயிரை தாக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை அளித்துள்ளார்.பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் சென்றாயன் கூறியதாவது: பெரியகுளம் வட்டாரத்தில் சம்பா நெல் அதிகஅளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ளது. நெல் பயிரை எலிகள் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எலிகளை கட்டுப்படுத்துவதற்கு எலிக்கிட்டிகளை வைத்து பிடித்து அழிக்க வேண்டும். எலிகளை ரசாயன மருந்து வைத்தும் கட்டுப்படுத்தலாம். ஜிங்க் பாஸ்பைடு 5 கிராம், உணவு எண்ணை 15 கிராம், பொடி செய்த தானியம் 4 கிராம், மாவுப்பொருள் 40 கிராம் ஆகியவற்றை கலந்து எலிநடமாடும் இடங்களில் வைத்து கட்டுப்படுத்த வேண்டும். மருந்து கலந்த உணவை வைக்கும் முன் இரண்டு நாட்களுக்கு மருந்து கலக்காத உணவை வைத்து எலிகளுக்கு நச்சு கூச்சத்தை போக்க வேண்டும். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ஜிங்க் பாஸ்பைடு கலந்த உணவை வைத்து எலிகளை கட்டுப்படுத்த வேண்டும்.