திருச்சி, டிச.11: புத்தாண்டில் நடைபெற உள்ள தமிழ்நாடு கபடி பிரிமியர் லீக் போட்டிக்கான அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 14, 15 திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.தமிழ்நாடு சடுகுடு (கபடி) பிரிமியர் லீக் போட்டி குழுவின் தலைவர் பிராமிஸ் முத்துசாமி, திருச்சி நியூ கபடி சங்க செயலாளர் கஜராஜன் ஆகியோர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை பிரபலமாக்கும் நோக்கிலும், அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கிலும் தமிழ்நாடு சடுகுடு (கபடி) பிரிமியர் லீக் குழு சார்பில் வரும் ஆங்கில புத்தாண்டு (2020) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மாபெரும் கபடி லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 85 கிலோ ஆண்களுக்கு மட்டும் இப்போட்டி நடக்கிறது. இந்த லீக் கபடி போட்டிகளுக்காக அணி வீரர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் மூலம் கபடி வீரர்கள் முன்பதிவு நடந்து வருகிறது. டிச. 14, 15ம் தேதி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் லீக் போட்டி அணிகளுக்கான வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் நேரிலும் வரலாம். தகுதியும், விருப்பமும் உள்ள வீரர்கள் ரூ.300 பதிவு கட்டணம் செலுத்தி தகுதித் தேர்வில் பங்கேற்கலாம்.