குமாரபாளையம், டிச.11: குமாரபாளையம் நகராட்சியில் இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை சாலையோரம் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை இந்தியா திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், நகராட்சி பொறியாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அதிகாரிகள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சியில் சுகாதார மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் படி, புதியதாக கட்டப்படும் வீடுகளின் கழிவுகள், பழைய வீடுகளை இடிப்பதால் ஏற்படும் கழிவுகள் அனைத்தையும், தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்வதற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கழிவுகளை கட்டிட உரிமையாளர் தனது சொந்த செலவில், மணிமேகலை தெரு நுண் உர செயலாக்க மையத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தில் கொட்ட வேண்டும். மாறாக கட்டிட கழிவுகளை தெருக்களில் கொட்டினால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.