கலசபாக்கம், டிச.11: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி கலசபாக்கம் அருகே பர்வத மலையில் மகா தீபம் ஏற்றினர். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை கோயிலில் நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், மகா தீபம் ஏற்றுவதற்காக, ஏராளமான பக்தர்கள் நெய் ஏந்தி, அரோகரா கோஷத்துடன் மலை மீது ஏறினர். சுமார் 700 அடி உயரத்தில் செங்குத்தான கடப்பாரை படி மீது ஏறும்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணதிர செய்தது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 4,560 அடி உயர பர்வத மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மகா தீபத்தையொட்டி கலசபாக்கம், கடலாடி, தென்மகாதேவ மங்கலம், கோயில்மாதி மங்கலம், அருணகிரி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.