தூத்துக்குடி: குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நில எடுப்பு பணிகளுக்கான சிறப்பு டிஆர்ஓ ஜெயராஜ் தூத்துக்குடியில் நேற்று பொறுப்பேற்றார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக சுமார் 2500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இந்த நில கையகப்படுத்தும் பணிக்காக ஏற்கனவே 8 தாசில்தார்களை நியமனம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலராக பணியாற்றி வந்த ஜெயராஜ், பதவி உயர்வுபெற்று இப்பணிகளுக்கான சிறப்பு டிஆர்ஓவாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வந்த ஜெயராஜ், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு டிஆர்ஓவாக பொறுப்பேற்றுக்கொண்டதோடு கலெக்டர் சந்தீப்நந்தூரியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.