பாபநாசம் பகுதியில் வடிய வழியின்றி காலிமனைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

பாபநாசம், டிச. 10: பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதேபோல் பாபநாசம் திருப்பாலத்துறை, சாலியமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகளில் மழைநீர் வடிய இடமின்றி தேங்கி நிற்கிறது. இதனால் பாபநாசம் பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பாபநாசம் பகுதி மக்கள் கூறுகையில், பாபநாசத்தின் வடிகால்களான அன்னுக்குடி வாய்க்கால், திருப்பாலத்துறை வாய்க்கால், பாபநாசம் வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. இதில் அன்னுக்குடி வாய்க்கால் சாக்கடையாகி விட்டது. பாபநாசம் கபிஸ்தலம் சாலை வழியாக சென்ற வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.

வித்யா பாடசாலை பின்பக்க வழியாக தான் வடிகால் வாய்க்கால் சென்றது. இந்த வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் போனதால் மழை பெய்தால் மழைநீர் வடிய இடமின்றி போனது. மழைநீர் வடிய இடமில்லாது போனதால் பாபநாசம் வித்யா பாடசாலை பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. பின்னர் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர். பாபநாசத்தில் உள்ள பாபநாசம் வாய்க்கால், அன்னுக்குடி வாய்க்கால், கோபுராஜபுரம் வாய்க்கால், திருப்பாலத்துறை வாய்க்கால் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகள் இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு அகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories: