திண்டுக்கல், டிச. 10: உள்ளாட்சி தேர்தல் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தலும், 7 ஒன்றியங்களில் 2ம் கட்ட தேர்தலும் நடக்கவுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் டிச. 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் துவங்கியுள்ளது. நேற்று அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், சுயேச்சைகள் பலரும் பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 306 கிராம ஊராட்சி தலைவர், 2772 கிராம ஊராட்சி வார்டு, 232 ஒன்றிய கவுன்சிலர், 23 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 3333 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. நடைபெற உள்ள தேர்தலில் 31 தேர்தல் அலுவலர்கள் 429 உதவி தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 460 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.