ஊட்டி, டிச. 10: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 17 கிராம ஊராட்சி தலைவர், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 216 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 18 கிராம ஊராட்சி தலைவர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு வரும் 30ம் தேதி நடக்கிறது.