ஈரோடு, டிச.10: ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 95 சிற்றூராட்சிகளுக்கு வரும் 27ம்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, 30ம் தேதி 130 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மற்றும் 30ம்தேதி என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர்கள், 2,097 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 2,524 பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், 14 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள், 225 சிற்றூராட்சி துணைத் தலைவர்கள் என 255 உறுப்பினர்களுக்கு மறைமுகமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலில் மாவட்டத்தில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 சிற்றூராட்சிகளுக்கும், கோபிச்செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 சிற்றூராட்சிகளுக்கும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 23 சிற்றூராட்சிகளுக்கும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 சிற்றூராட்சிகளுக்கும், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 சிற்றூராட்சிகளுக்கும் என 95 சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.