திருவண்ணாமலை, டிச.9: கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ம் நாளான நேற்று தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கை செலுத்தினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ம் நாள் உற்சவத்தில் நடைபெறும் பிச்சாண்டவர் உற்சவம் தனித்துவமிக்கது. கையில் மண்டை ஓடு (கபாலம்) ஏந்திய நிலையில் பிச்சாண்டவர் திருக்கோலத்தில் சிவபெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இவ்விழாவின் சிறப்பாகும்.அதன்படி, பிச்சாண்டவர் உற்சவம் எனும் பிச்சைதேவர் விழா நேற்று மாலை 4.30 மணியளவில் விமரிசையாக நடந்தது. அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து தொடங்கிய வீதி உலா தேரடி வீதி, மண்டித்தெரு, காமராஜர் சிலை சந்திப்பு, மாடவீதி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பிச்சாண்டவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உற்சவத்தின்போது கொண்டு செல்லப்பட்ட பிரமாண்டமான உண்டியலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்தினர். பிச்சாண்டவர் உற்சவம் மட்டுமே மாடவீதியை மட்டுமின்றி மற்ற வீதிகளிலும் செல்வது குறிப்பித்தக்கது.பரம்பொருளை தவிர மற்றெல்லாம் அழியக்கூடியவைகளே என்ற உண்மையை பிச்சாண்டவர் கையில் உள்ள மண்டைஓடு உணர்த்துகிறது. மேலும், அவர் ஏந்திச்செல்லும் பிச்சை பாத்திரத்தில் `நான்'''' எனும் அகந்தையை போட்டு விடுங்கள் என இறைவன் உணர்த்துகிறார்.ஆடையில்லா தோற்றத்தில் கபாலம் எந்திய கரத்துடன் காட்சிதரும் திருக்கோலமே பிச்சாண்டவர். `நான்'''' எனும் செருக்கை கைவிட்டு, `அவன்'''' அருளால் தான் புலனடக்கம் உண்டாக வேண்டும் என்பதும், அகந்தை ஏற்பட்டால் அழிவு நிச்சயம் என்பதும் இந்த விழாவின் உட்பொருளாகும்.
எனவே, பிச்சாண்டவர் உற்சவத்தில் மட்டுமே உண்டியல் கொண்டு செல்வதும் மரபாக அமைந்திருக்கிறது. தங்களுடைய செல்வங்களை உண்டியலில் செலுத்தி, செல்வ செருக்கை அகற்றுதல் இதன் ேநாக்கமாகும். உற்சவத்தின் நிறைவாக நேற்று இரவு 10 மணியளவில் திருவண்ணமலையில் உள்ள சாதுக்கள் சத்திரம் அருகே வாணவேடிக்கை நடந்தது.