அன்னூர், நவ. 1: அன்னூர் சுற்றுவட்டார பகுதியிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு என திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரித்ததன் காரணமாக போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. குறிப்பாக ஊராட்சி பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்னூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால், மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க மறுத்து வருகின்றனர்.