புதுச்சேரி, நவ. 29: மடுவுபேட் முரளி கொலை வழக்கில் விடுதலையான தட்டாஞ்சாவடி செந்திலை ஊரில் நுழைய தடைவிதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிமேடு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் முரளி. ரவுடியான இவர் 2017ல் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சுந்தர், தட்டாஞ்சாவடி செந்தில், அமரன், அசோக், சுரேஷ், பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கடந்த வாரம் புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே இருந்தவர்களை தவிர காலாப்பட்டு சிறையில் இருந்த தட்டாஞ்சாவடி செந்தில், அமரன் உள்ளிட்டோரும் விடுதலை ஆகினர். இதில் அமரனை வடலூர் அருகே மர்ம கும்பல் அன்று இரவே வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி செந்தில் என்ற ரமேசை ஊரில் நுழைய தடைவிதிக்க வேண்டுமென கோரிமேடு காவல்துறை தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் முறையிடப்பட்டுள்ளது. எஸ்ஐ இனியன் தலைமையிலான போலீசார், அசம்பாவிதம் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிந்துரையை செய்துள்ளனர்.