திருப்பூர், நவ. 22: திருப்பூர் விக்னேஷ்வரா நகர் பகுதியில் வீடுகளை சுற்றி மழை நீருடன் கழிவுநீர் தேங்குவதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம் 19வது வார்டுக்கு உட்பட்ட விக்னேஷ்வரா மெயின் வீதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பெரும்பாலான இடங்களில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளுக்கு முன்பு குழி வெட்டி, அதில் கழிவு நீரை தேக்கி வைத்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வந்தது. இ்ந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து தெருக்களில் குளம்போல் தேங்கி கடும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.