காலாப்பட்டு, நவ. 20: புதுவை அருகே கோட்டக்குப்பத்தில் ஓடும் பேருந்தில் போலீஸ்காரரை சரமாரி தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுவை தவளக்குப்பம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் செந்தில் (34). இவர் காலாப்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துக்கொண்டு காலாப்பட்டில் இருந்து தனியார் பேருந்தில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பிள்ளைச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவரிடம் உடையை சரிசெய்யுமாறு போலீஸ்காரர் செந்தில் கூறியபோது அந்த நபர் திடீரென தகராறு செய்து அசிங்கமாக திட்டி உள்ளார்.மேலும் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக செந்திலை அவர் தாக்கி உள்ளார். உடனே பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக செந்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் பிள்ளைச்சாவடி முருகன் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (19) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.