திருவில்லிபுத்தூர், நவ. 20: திருவில்லிபுத்தூரில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கப்பல் விடும் நூதன போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் திருவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் போதிய வடிகால் வசதியில்லாமல் மழைநீரோடு, கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. திருவில்லிபுத்தூர் பேச்சியம்மன் கோயில் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்ற திருவில்லிபுத்தூரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர்.