செல்போன் வாங்கியதில் தகராறு வாலிபருக்கு அடி-உதை; இருவர் கைது

கொடைக்கானல், நவ. 20: கொடைக்கானலில் செல்போன் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் கார்மேல்புறம் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் சந்துரு. இவர் கோக்கர்ஸ் வாக் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு புதிய செல்போன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா மகன் முகமது அசாருதீன் (18) மற்றும் ஆனந்தகிரி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்த ரஃபிக் ராஜா மகன் அஜ்மீர்கான் (20) இருவரும் சந்துரு வீட்டில் இருந்தபோது அவருடன் செல்போன் வாங்கியது சம்பந்தமாக தகராறு செய்து உள்ளனர். தகராறு முற்றியதில் சந்துருவை முகமது அசாருதீன் மற்றும் அஜ்மீர்கான் இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சந்துரு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி சந்துருவின் தந்தை சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: