சேலம், நவ.20: 2ம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வில் 648 இளைஞர்கள் அடுத்தநிலைக்கு தேர்ச்சி பெற்றனர். 142 பேர் வெளியேற்றப்பட்டனர்.தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலம் முழுவதும் 15 மையங்களில் உடல் தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்வர்கள் கலந்துகொண்டனர். கடந்த 6,7, 8ம் தேதிகளிலும், நேற்று முன்தினமும் நடந்த உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக்கட்டமாக உடல்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக 800 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 790 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை சரக டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். சூப்பர்செக் ஆபீசரான மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், தேர்வு சரியாக நடக்கிறதா என ஆய்வு செய்தார்.