கால்பந்து போட்டியில் வெற்றி ஜவகர் பள்ளி மாணவிகளுக்கு என்எல்சி இயக்குனர் பாராட்டு

நெய்வேலி, நவ. 19: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த         பள்ளிகளுக்கு இடையேயான தேசிய கால்பந்து போட்டி நொய்டாவில் உள்ள ஜே.பி.எம் குளோபல் பள்ளியில் நவம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில்  உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளின் பல்வேறு மண்டலங்களில் இருந்து முதல் இரண்டு இடங்களை பிடித்த இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் என்எல்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவிகள் அணி 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். இப்போட்டியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி திவ்யா சிறந்த வீராங்கனைக்கான சிறப்பு பரிசை பெற்றார். வெற்றிபெற்ற இம்மாணவிகளை நெய்வேலி என்எல்சி நிறுவன மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் பாராட்டினார். அப்போது பள்ளி முதல்வர் யசோதா, செயலாளர் மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் ஜவகர் கல்வி குழும அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: