சிவகாசி, நவ. 19: சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவைகளை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகாசியில் திருத்தங்கல் சாலை, திருவில்லிபுத்தூர் சாலை, வெம்பக்கோட்டை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் படுத்து உறங்குகின்றன. தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். சில சமயங்களில் பலத்த காயமடைந்து உயிரிழக்கும் சம்பவமும் நடக்கின்றது.