கோவை, நவ. 19: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முறை சாரா கல்வி பயில்வோர் மற்றும் சமுதாய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல் குழுக்குள் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு முதன்மை தேர்தல் கமிஷனர் வழிகாட்டுதல்களின்படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முறை சாரா கல்வி பயில்வோர் மற்றும் சமுதாய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பயிற்றுவித்தல் குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், முதலாவதாக மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு, மாநில அளவிலான பயிற்றுநர்கள் மூலமாக ஒரு நாள் பயிற்சி கடந்த 15ம் தேதி நடத்தப்பட்டது. பயிற்சி வகுப்பு முதன்மை தேர்தல் அலுவலகத்தின் இணை முதன்மை தேர்தல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய் கோட்ட அலுவலர்கள், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் என 67 அலுவலர்கள் கலந்து கொண்டனர்.