சிவகங்கை, நவ.14: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்வது கடந்த ஜனவரி முதல் படிப்படியாக இப்பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளியில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி கல்வி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கல்வித்துறையுடன் இணைப்பில் இருக்கும். ஆனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களே இல்லை. கம்ப்யூட்டர் பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் பழைய வெர்சன்களை கொண்டதாகும். மிகவும் மெதுவான செயல்பாட்டை கொண்ட இந்த கம்ப்யூட்டருடன் உள்ள சி.பி.யுவில் தற்போதைய மென் பொருட்களை ஏற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் இண்டர்நெட் வேகம் என தினமும் காலையில் பயோமெட்ரிக்கில் விரல் ரேகை பதிவு செய்வதற்கே நீண்ட நேரம் பிடிக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து வரும் இஎம்ஐஎஸ் எண் பதிவேற்றம் செய்யும் மென் பொருளிலும் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். இதிலும் இண்டர்நெட் பிரச்னையால் பாதிப்பு ஏற்படும். இவை இரண்டும் தவிர வழக்கம்போல் நோட்டு புக்கில் ஆசிரியர் வருகை பதிவு செய்து கையொப்பமிட வேண்டும். இவ்வாறு மூன்று வருகை பதிவேடுகளில் வருகையை பதிவு செய்வதால் தேவையற்ற நேர விரையம் ஏற்படுவதாக ஆசிரியர் புகார் தெரிவிக்கின்றனர்.