புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரி கடலூர் சாலை, 100 அடி சாலை, புவன்கரே வீதி ஆகிய சாலைகள் மரப்பாலம் பகுதியில் சந்திப்பதால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி- கடலூர் சாலையில் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை உள்ள சாலையை குறைந்தது 80 அடி முதல் 100 அடிக்கு இருபுறங்களில் அகலப்படுத்த ஏற்கனவே அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் குடியிருப்பு பகுதிகள் விரிவாக்கத்தின் போது சேதமடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விரிவாக்கப்பணி கிடப்பில்
போட்டுள்ளது.
இதற்கு தற்காலிக தீர்வாக குறுகலாக உள்ள மரப்பால பகுதியை விரிவுபடுத்த வேண்டுமென சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். தற்போதுள்ள மரப்பாலம் பேருந்து நிறுத்தம், சாலையிலே இருப்பதால், வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்குவரத்து இடைஞ்சலாக இருக்கும் மின்துறையின் மதில் சுவர் அதிரடியாக அகற்றப்பட்டது. மேலும் அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதன்மூலம் வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு நிற்காமல் செல்லும் போது, மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் சிறிது குறையும்.