கண்ணமங்கலம், நவ.13: கண்ணமங்கலம் அருகே நடந்த உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் இந்திய ஆராய்ச்சி மையம் மற்றும் திருவண்ணாமலை வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் உழவர் விழா நேற்று நடந்தது. இதில் தேசிய மனிதவள மேம்பாட்டு இணை செயலாளரும், ஜல்சக்தி அபியான் திட்ட முதன்மை அலுவலருமான ரஜீத்குமார் சென் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கருணாகரன் வரவேற்றார். விழாவில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நட்டு பராமரித்தல், வேளாண்மை தொழில்நுட்ப வசதிகள், அரசு மானியம், மதிப்பு கூட்டும் பொருள், விற்பனை ஆகியன குறித்து பேசினார்.