திருப்புத்தூர், நவ.12: திருப்புத்தூர் அச்சுக்கட்டுத்தெருவில் உள்ள அம்மா ஊரணி குளத்தில் தாமரைப்பூக்களை திருடிய வாகனத்தை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் உள்ளது அம்மா ஊரணி குளம். இந்த குளத்தில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் கடந்த 2019-2020ம் ஆண்டிற்கு மீன் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த ஏலத்தை அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் என்பவர் வெறும் ரூ.4 ஆயிரத்திற்கு எடுத்து ரசீது போட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த குளத்தில் தாமரை விதைகளை தூவி அதில் வளரும் தாமரை மலர்களை சிலர் பறித்து விற்பதாக வழக்கறிஞர் ராபின் என்பவர் திருப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. நேற்று காலையில் மதுரையை சேர்ந்த இரண்டு பேர் அம்மா ஊரணி குளத்தில் தாமரைப்பூக்களை பறித்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டனர். தாமரைப்பூக்களை பறித்தவர்கள் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.