திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலையில் பனி மூட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பயிரிட்டுள்ள மல்லிகை பூ தோட்டத்தில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதை, வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா சாகுபடி செய்வது போன்று, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பல வகையான பூ செடிகளும் பயிரிட்டு வருகின்றனர். நாள்தோறும் வருவாய் பெறக்கூடிய பயிரான பூ தோட்டம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தின் காரணமக திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக பனி மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நெல் பயிர்களுக்கு மட்டுமின்றி, பூ தோட்டங்களிலும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.