கவர்னருக்கு அதிகாரம் இல்லையென்றால் கோப்புகளை ஏன் அனுப்ப வேண்டும்?.

புதுச்சேரி, நவ. 8:      புதுச்சேரி முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகாரம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறதா அல்லது கவர்னருக்கு இருக்கிறதா? என்பதை பற்றி முதல்வர் பேசி வருவது துரதிருஷ்டவசமானது. இப்பிரச்னை நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது. எந்த நீதிமன்றமும் இதுவரை இறுதி தீர்ப்பு சொல்லவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்னையை பற்றி கருத்து கூறக்கூடாது. யூனியன் பிரதேச சட்டம் 1963ஐயும், அதை சார்ந்த அலுவல் விதிகளையும் திருத்தாத வரையில் புதுச்சேரியில் அதிகாரம் கவர்னருக்குத்தான் உள்ளது என்பதை அச்சட்டங்களை படித்தவர்களுக்கு நன்கு புரியும்.  

 கோப்புகளை பார்த்து உத்தரவு அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கும்போது அன்றாடம் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை பார்ப்பதற்கு கவர்னரின் தலையீடு தேவைப்படுகிறது. இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாக இருக்க முடியும்? கவர்னருக்கு அதிகாரம் இல்லையென்றால் அவருக்கு ஏன் அமைச்சர்களும், முதல்வரும் கோப்புகளை அனுப்புகின்றனர்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ள ஒரு பிரதேசத்தில் அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் யூனியன் பிரதேச சட்டத்தை இயற்றியவர்களுக்கு இது புரியாமல் ஒரு மிகப்பெரிய ஜனநாயக பிழையை செய்துள்ளனர். இந்த முரண்பாட்டை களைவதற்கு இச்சட்டத்தை திருத்தியாக வேண்டும் அல்லது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றாக வேண்டும். மாநிலத்தை எதிர்நோக்கியுள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தம், வறுமை, இலவச அரிசி, ஓய்வூதியம், 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 50 மாதங்களாக சம்பளம் கொடுக்காதது, அரசு சார்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக கவர்னரை பற்றி முதல்வர் குறைகூறி வருகிறார் என புதுச்சேரி மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.   எனவே, மற்றவர்களை குறைகூறுவதை விட அமைதியாக உட்கார்ந்து ஆழ்ந்து சிந்தித்து உண்மையான பொருளாதார வளர்ச்சியை முதல்வர் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: