புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகாரம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறதா அல்லது கவர்னருக்கு இருக்கிறதா? என்பதை பற்றி முதல்வர் பேசி வருவது துரதிருஷ்டவசமானது. இப்பிரச்னை நீதிமன்ற பரிசீலனையில் உள்ளது. எந்த நீதிமன்றமும் இதுவரை இறுதி தீர்ப்பு சொல்லவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பிரச்னையை பற்றி கருத்து கூறக்கூடாது. யூனியன் பிரதேச சட்டம் 1963ஐயும், அதை சார்ந்த அலுவல் விதிகளையும் திருத்தாத வரையில் புதுச்சேரியில் அதிகாரம் கவர்னருக்குத்தான் உள்ளது என்பதை அச்சட்டங்களை படித்தவர்களுக்கு நன்கு புரியும்.
கோப்புகளை பார்த்து உத்தரவு அளிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கும்போது அன்றாடம் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை பார்ப்பதற்கு கவர்னரின் தலையீடு தேவைப்படுகிறது. இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாக இருக்க முடியும்? கவர்னருக்கு அதிகாரம் இல்லையென்றால் அவருக்கு ஏன் அமைச்சர்களும், முதல்வரும் கோப்புகளை அனுப்புகின்றனர்?