காரைக்கால், நவ. 8: காரைக்கால் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை படகில் கடத்தி சென்று தமிழகத்தில் விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. போலீசார் அவ்வப்போது, வாகன சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு அம்மன்கோவில் பத்து மீனவர் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் ஒரு லாரி கொள்ளளவு கொண்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சுமார் 136 பெட்டி மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று ெசல்போனில் வீடியோ எடுத்து, தகுந்த ஆதாரத்துடன் நகர காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.