கீழப்பாவூர் பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்

பாவூர்சத்திரம், நவ. 8: கீழப்பாவூர் பகுதியில் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் நெல் நடவு பணி தீவிரமடைந்து உள்ளது.  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளம் உள்ளிட்டவை நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த குளங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கீழப்பாவூர் வட்டார வடபகுதி குளங்கள் நிரம்பியதாலும், தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதாலும் அதன் மூலம் பாசன வசதி பெறும் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, துவரங்காடு, மகிழ், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டினம், நாகல்குளம், சிவகாமிபுரம், மேல பட்டமுடையார்புரம், அருணாப்பேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக இப்பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில்தான் நெல் நாற்று நடும் பணிகளை துவக்குவர். ஆனால் இந்தாண்டு முறையாக மழை பெய்ததால், தற்போதே நெல் நாற்றுநடும் பணியை துவக்கி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்ததால் குளங்கள் அனைத்தும் நிரம்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிது. இந்த வருடம் நெல் மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

நேரடியாக விதையை தூவிய விவசாயிகள்:

பொதுவாக நெல் பயிரிட டிராக்டர் வைத்து நிலங்களில் தொளி அடித்தும், விவசாய கூலி ஆட்கள் மூலம் வரப்பு வேலை செய்து, நாற்று பாவி பின்னர் அதை பிடுங்கி நடுவது வழக்கம். இந்த பணிக்கு உள்ளூரில் ஆட்கள் கிடைக்காததால், வெளியூர் இருந்து ஆட்களை வரவழைத்து அவர்களுக்கு போக்குவரத்து செலவு, சம்பளம் மற்றும் களைப் பறிப்பதற்கு, உரங்கள் என்று ஒரு ஏக்கருக்கு ரூ.5000 முதல் 10000 வரை  செலவு செய்கின்றனர்.இந்த செலவை கட்டுப்படுத்தும் வகையில் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள், இந்தாண்டு நெல் விதைகளை வாங்கி அதை நன்றாக பக்குப்படுத்தி, தேவையான இடங்களில் சரியான விதத்தில் தூவுகின்றனர். இதனால் செலவு குறையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: