கிருஷ்ணகிரி, நவ.8: சிறுசேமிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் பெறும் வகையில் முகவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டார். உலக சிக்கன நாளையொட்டி, மாவட்ட அளவில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நடனப் போட்டி மற்றும் நாடக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2018-19ம் நிதியாண்டில் சிறுசேமிப்பில் மாவட்ட அளவிலான மகளிர் முகவர்கள், வட்டார அளவிலான நிலை முகவர்கள் மற்றும் நகராட்சி அளவிலான முகவர்கள் சிறப்பாக பணியாற்றி, ₹350 கோடியே 22 லட்சத்து 7 ஆயிரத்து 730 என்ற இலக்கை எட்டியுள்ளனர். உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். சிறுசேமிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் பெறும் வகையில், சிறுசேமிப்பு முகவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும்,’ என்றார்.