போச்சம்பள்ளி, நவ.8: போச்சம்பள்ளி பகுதியில் தொடர் மழையால் பருத்தி செழித்து வளர்ந்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக பருவமழை பொய்த்து போனதால் பருத்தி சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். சில விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி 25 சதவீத அளவிற்கு பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு போயின. அதன் காரணமாக 2 ஆண்டாக விவசாயம் நலிவடைந்தது. பருத்தியை அடியோடு மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த மாதம் நல்ல மழை பெய்ததால் கேஆர்பி அணை நிரம்பி பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டு போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக விவசாய நிலங்களில் உள்ள கிணறு மற்றும் குட்டைகள் நிரம்பி, நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது.