தா.பழூர், நவ. 8: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மக்காச்சோள பயிரில் ராணுவ படைப்புழு கட்டுப்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி நடந்தது. வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா பேசும்போது, மக்காச்சோள பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புழு தாக்குதலை கோடை உழவு செய்யும் எளிய தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்தப்புழு பயிர்களுக்குள்ளும் இலை குருத்து ஆகியவற்றிலும், மண்ணுக்குள்ளும் சென்று மறைந்து கொள்வதால் இதை கட்டுப்படுத்துவது சிரமமானதாக உள்ளது.எனினும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உயிரியல் மருந்துகளான ‘பெவேரியா பேசியானா”,’மெட்டாரைசியம்”,’பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்” மற்றும் என்.பி.வைரஸ். டிரைகோகிரம்மா ஒட்டுண்ணி, பொறிவண்டுகள் போன்றவை படைப்புழுக்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த புழுக்களை கட்டுப்படுத்த இண்டாக்சோ கார்ப் பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 1 மி.லி அல்லது இமாமெக்ட்டின் பென்சோயேட் என்ற பூச்சிக்கொல்லியை லிட்டருக்கு 0.4 கிராம் என்ற அளவிலும் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் வயல்களில் தெளிக்க வேண்டும் என்றார்.