வத்தலக்குண்டு, நவ. 8: மஞ்சளாறு அணை தண்ணீரை திறக்க கோரி வத்தலக்குண்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, ஆலங்குளம் உள்பட 10 ஊர்கள் பழைய ஆயக்கட்டு பகுதியாகும். இப்பகுதி விவசாய நிலங்களுக்கு ஆண்டுதோறும் 135 நாட்கள் மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியில் 55 அடி தண்ணீர் உள்ளது. முதலில் உபரி நீரை மட்டும் வெளியேற்றிய பொதுப்பணித்துறையினர் பின்னர் தமிழக அரசின் உத்தரவுப்படி பாசனத்திற்காக 60 கனஅடி தண்ணீரை திறந்து விட்டனர். இந்த தண்ணீர் வரும் வழியில் உள்ள கண்மாய்களில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களின் நேரிடை பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த வாரம் பெய்து கொண்டிருந்த மழையும் நின்று விட்டது. மேலும் அணையிலிருந்தும் தண்ணீர் வராததால் இப்பகுதியில் விவசாய பணிகளை துவங்க முடியாமல் தவிக்கின்றனர்.