அவிநாசி நவ.8: அவிநாசி ஒன்றியம் கருக்கன்காட்டுப்புதூர் கிராமப் பகுதிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. உலகளாவிய ரீதியில் போதைப்பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நிலையிலும் போதைப்பொருட்களை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக போதைப்பொருட்கள் நவீனஉருவிலும், எளிமையானமுறையிலும் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் அவற்றை சமீபகாலமாக பயன்படுத்தும் அவலம் பெருகிவருகிறது. போதிய விழிப்பணர்வு இருந்தும்,தடை செய்யப்பட்ட பொருட்கள் கடைகளில் தாராளமாக கிடைப்பது மாணவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரையின்படி, அவிநாசி ஒன்றியம் கருக்கன் காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அனைத்து மாணவர்களும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தங்கள் வாழ்நாளில் எவ்வித போதைக்கும் அடிமையாகமாட்டோம் எனவும், தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இப்பழக்கத்திலிருந்து விடுவிப்போம் எனவும் உறுதி எடுத்துக்கொண்டனர். மேலும், மாணவ சமுதாயத்திடையேயும் மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணத்தில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் மூன்று குழுக்களாக பிரிந்து நடுவச்சேரி, வடுகபாளையம், வரதராஜநகர் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுபிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்களை கோஷங்களாக எழுப்பியும் தங்கள் கருத்தை வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் திருவேங்கடசெல்வியும், பெற்றோர் ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.