திருப்பூர், நவ.8:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி முதலிபாளையம், சிட்கோ மீனாட்சிபுரம் 7வயது மற்றும் 8 வயது குழந்தைகள், தாராபுரம் ரோடு புதுக்காடு பகுதியை சேர்ந்த 21 வயது ஆண், சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 22 வயது பெண் ஆகிய 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.