நாகர்கோவில், நவ.7 : குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை சூப்பர் வைசர்களிடம் கொள்ளையடித்த கும்பலுக்கு துப்பாக்கி சப்ளை செய்த நபரை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம், கன்னியாகுமரி, சுசீந்திரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளிலும், டாஸ்மாக் சூப்பர் வைசர்களை தாக்கியும் தொடர்ச்சியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி, நாங்குநேரியிலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கும்பல் பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் தான் ஈடுபட்டு வருவதும், இந்த கும்பலில் உள்ளவர்கள் துப்பாக்கி வைத்து மிரட்டுவதும் தெரிய வந்தது. இதையடுத்து நெல்லை, குமரி தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கினர். இதன் அடிப்படையில் குமரி மாவட்ட தனிப்படை போலீசார், நடத்திய அதிரடி சோதனையில், நாகர்கோவில் கலுங்கடி பகுதியை சேர்ந்த அருண் சஜுவ், வடசேரி பள்ளிவிளையை சேர்ந்த பிரபாகரன், மார்த்தாண்டத்தை சேர்ந்த நீலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.