சாத்தூர், நவ.7: சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் சாலை சரியில்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மின்விளக்குகள் எரிவதில்லை, குப்பைகளையும் அள்ளுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர். சாத்தூர் அருகேயுள்ளது படந்தால் கிராமம். இங்கு தென்றல்நகர், மருதுபாண்டியர் நகர், முனியசாமி கோவில் தெரு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலை சேதமடைந்து காணப்படுகின்றது. மக்கள் நடக்க முடியாமல் குண்டும், குழியுமாக கட்சியளிக்கிறது. டூவீலர்களில் சென்றால் பள்ளத்தில் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. சிறுமழை பெய்துவிட்டால் சேறும், சகதியாக மாறிவிடுகிறது. அதிகளவில் மழை பெய்தால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி ஒரு குளம்போல் காட்சியளிக்கும். மேலும், முறையான வாறுகால் வசதியில்லாததால் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. தினசரி துப்புரவு பணிகள் நடக்காததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தெருவிளக்குகள் இருந்தும் சரிவர எரிவதில்லை. தேவையுள்ள இடங்களில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது என மக்கள் கூறுகின்றனர்